Saturday, October 31, 2009

தோஷங்களை போக்கும் "பிரதோஷம்"

தோஷங்களை போக்கும் "பிரதோஷம்"





ஆன்மீகம், கட்டுரை
மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டதும் அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
திருமால், பிரம்மன், தேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார். அன்னை பார்வதி சிவபெருமானின் கழுத்தில் தன் கைகளால் தடவிய போது கொடிய விஷம் அமுதாக மாறியது. சிவபெருமான் "திருநீல கண்டர்' ஆனார்.
"சனி பிரதோஷம்"

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

"பிரதோஷ காலம்"

பிரதோஷ காலம் தினமும் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேகால் நாழிகையும், மறைந்த பிறகு மூன்றேகால் நாழிகையும் என மொத்தம் ஏழரை நாழிகை (3 மணி நேரம்) ஆகும். பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் தன்னுள் எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்கிறார்.

"பிரதோஷ தரிசனம்"

வளர்பிறை, தேய்பிறையின் 13ம் நாள் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்ய வேண்டும். நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே தியானிப்பது சிறப்பாகும்.

"பிரதோஷ வகைகள்"

பிரதோஷமானது நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று 5 வகைப்படும்.

நித்ய பிரதோஷம்: தினமும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம்: கிருஷ்ண பட்ச திரயோதசி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம்: சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம்: உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கு கீழ்க்கண்ட பொருட்களை கொடுத்தால் விளையும் பலன்கள் வருமாறு:

1. பால் கொடுத்தால் நோய் தீர்ந்து நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் தந்தால் பல வளமும் உண்டாகும்.
3. தேன் கொடுத்தால் இனிமையான சாரீரம் கிட்டும்.
4. பழங்கள் கொடுத்தால் விளைச்சல் பெருகும்.
5. பஞ்சாமிர்தம் தந்தால் செல்வச்செழிப்பு ஏற்படும்.
6. நெய் கொடுத்தால் முக்திப்பேறு கிட்டும்.
7. இளநீர் தந்தால் நல்ல மக்கட்பேறு கிடைக்கும்.
8. சர்க்கரை கொடுத்தால் எதிர்ப்புகள் மறையும்.
9. எண்ணெய் தந்தால் சுகவாழ்வு கிட்டும்.
10. சந்தனம் கொடுத்தால் சிறப்பான சக்திகள் பெறலாம்.
11.மலர்கள் தந்தால் தெய்வ தரிசனம் கிடைக்கும்.

மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் பிறவி எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே, பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறுவோம்.

சிவமயம்

என்றும் அன்புடன்
பால்கி (BALAKRISHNAN)

1 comment: